பஞ்ச் டயலாக், சண்டை காட்சிகள், குத்துப்பாட்டு இருந்தால் அது கெட்ட படமா? என்று டைரக்டர் பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் கரண் நடிப்பில் புதுமுக இயக்குநர், பாலு நாராயணன் இயக்கியிருக்கும் படம் "சூரன்". இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, ஜனநாதன், ஏ.வெங்கடேஷ், சற்குணம், பாண்டியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பேரரசு, தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார். அவர் பேசுகையில், இந்த படத்தின் பாடல்களை பார்த்தோம். ரொம்பவே கமர்ஷியலா எடுத்திருக்காங்க. இந்த படத்தோட இயக்குநர் பாலுநாராயணன் ஏ.வெங்கடேஷ், என்னை போன்ற கமர்ஷியல் இயக்குநரா வருவாரு. கமர்ஷியல் படம் என்றாலே விமர்சகர்கள் மத்தியில் ஒரு மாதிரியான கருத்து இருக்கிறது. அதாவது தேசிய விருதை குறி வைத்து ஒரு படம் எடுத்தால் அந்த படத்திற்கு விமர்சனம் எழுதுபவர்கள், பஞ்ச் டயலாக் இல்லாமல், சண்டைகாட்சிகள், குத்துப்பாட்டு இல்லாமல் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி என்று எழுதுகிறார்கள். அப்போ சண்டைகாட்சி, பஞ்ச் டயலாக் இருந்தால் அது கெட்ட படமா?
சரவணபவன் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு சாப்பாடு எப்படி இருந்தது என்றால் ரசம் நல்லா இருக்கு, சாம்பார் நல்லா இருக்கு என்று தான் சொல்வார்கள். அதற்கான கரி குழம்பு நன்றாக இருக்காது என்று ஆகிவிடுமா? சரவணபவனில் அதெல்லாம் கிடைக்காது. எந்த இடத்தில் என்ன கிடைக்குமோ, அதை பற்றிதான் பேச வேண்டும். அதனால் எதார்த்த படத்திற்கு அதற்கு தகுந்தாற்போல் எழுதுங்கள், கமர்ஷியல் படத்திற்கு தகுந்தாற்போல் விமர்சனங்கள் எழுதுங்கள். கமர்ஷியல் இல்லாமல் சினிமாவே கிடையாது. மற்ற படங்களில் இருபது சதவீதம் கமர்ஷியல் இருந்தால். கமர்ஷியல் படங்களில் ஐம்பது சதவீதம் இருக்கும். அதற்காக அது கெட்ட படமாகாது. இராமாயணத்தில் கூட சண்டைகளும், பஞ்ச் டயலாக்கும் இருக்கிறது. இராவணன் நிராயுதபாணியாக நின்றபோது ராமன். அவரைப் பார்த்து இன்று போய் நாளை வா என்று சொன்னதும் பஞ்ச் டயலாக்தான். அது சிறந்த காவியமாகவில்லையா?, என்று கேள்வி எழுப்பினார்.
வட சென்னையை கதை களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை 8 தயாரிப்பாளர்கள் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் பி.பி.பாலாஜி. இவர் ஷாம் நடித்த இன்பா படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு கன்னட சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.